இனிய உறவுகளே!
சாக்தத்தில், ஒப்பில்லாத ஒரு தமிழ் வேதம் "அபிராமி அந்தாதி" என்பது யாவரும் அறிந்ததே. அபிராமி அந்தாதியை பாராயணம் செய்யும் போது அம்மனே அருகில் வந்து மகிழ்வுடன் ரசித்துக் கேட்பாள் என்பது அனுபவப்பூர்வமான ஒரு உண்மை. அந்த தமிழ் வேதத்திலிருந்து சில பாடல்களை தருகிறேன். பாராயணம் செய்து வாழ்க்கையின் ஏற்றத்தை உணருங்கள்.
சென்னியது உன் பொன் திருவடித் தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உந்தன் பரமாகமப் பத்ததியே!
(பாடல் எண் - 6, எழுதியவர் - அபிராமிப் பட்டர்)
பொருள் :
எந்தன் சிரம் மேல் உந்தன் தாமரை போன்ற திருவடிகளும் சிந்தையுள் உனது திருமந்திரமும் உள்ளது. செந்தூரம் போன்று சிவப்பு அழகு உடைய தாயே! எப்பொழுதும் உன் அடியார்களை முன்னிறுத்தி, அவர்களுடன் கூடியே எனது எல்லா செயல்களும் நடக்கின்றன. நான் அனுதினமும் பாராயணம் செய்வது உன்னுடைய உயர்ந்த ஆகமங்களையே.