திங்கள், 22 ஏப்ரல், 2013

காலபைரவர் துதி....

காலபைரவர் பாடல்...
இத் திருப்பாடலை நாடோறும் மறவாது போற்று வோர்க்கு வறுமை முதலிய துன்பம் நீங்கும் . செல்வம் முதலிய பெருகி இன்பம் ஓங்கும் என்று பன்னிரு திருமுறை பற்றிய தேவாரம் வலைப்பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை 
தரித்ததோர் கோல காலப் பயிரவ னாகி வேழம் 
உரித்துமை யஞ்சக் கண்டு ஒண்டிரு மணிவாய் விள்ளச் 
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே


பொருள்
பலதிசைகளிலும் விரிந்து ஒளியைப் பரப்பிக்கொண்டிருக்கும் பளபளப்பான, கொடியவருக்கு பார்த்தவுடனே பயத்தை உண்டாக்கும் பயங்கரமான சூலத்தை   ஆயுதமாகவும், உலகை ஒடுக்கி உள்ளிழுக்கும் வெடி போன்ற ஓசையையுடைய தமருகம் எனும் உடுக்கையும் தனது திருக்கரங்களில் ஏந்தி, மிகுஅழகுடைய  கண்டோர் வினை கரையும் கால பயிரவராகி, தாருகாவனத்து முனிவர்களால் அனுப்பப்பட்ட யானையால் விழுங்கப்பட்டு பின் யானை உரித்த எம்பிரானாய், வேழம் உரித்த நாயகனாய் வெளிவந்தார். அவரது அந்த கஜ சம்ஹார காட்சியைக் கண்டு...அங்கையற்கண்ணி...அஞ்சனாட்சி அம்மை....திரிபுர சுந்தரி...அகிலம் காக்கும் அபிராமித்தாய் அஞ்ச... இறந்த யானையின் தோலைக்கண்டு அஞ்சும் அன்னையின் பேதமையைக் கண்டு தமது ஒளிவீசும் மணி போன்ற வாயைத் திறந்து சிரித்து அருள் செய்தார் திருச்சேறையில் உறையும் எம்  செந்நெறிச் செல்வனார் சிவபெருமான்.