செவ்வாய், 18 மே, 2010

திரு அங்கமாலை

திரு அப்பர் சுவாமிகள் எழுதிய திரு அங்க மாலை எனும் பதிகம் மிகவும் சுவையானது. பூந்தமல்லியில் உள்ள தையல் நாயகி உடனுறை வைத்தீஸ்வரர் ஆலயத்தில் தினமும் பள்ளியறை பூசையின் போது பல இள வயது அன்பர்கள் முற்றோதுதல் செய்வது நெஞ்சுக்கு இதமளிப்பதாக இருக்கின்றது. இறைவர் பள்ளியறை செல்லும் போது இப்பாடலை அன்பர்கள் பாடக் கேட்டு மெய் மறந்து ஊன் உருகி யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற இதோ - திரு அங்க மாலை

திரு அங்கமாலை


தலையே நீ வணங்காய் - தலை
மாலைதலைத் தணிந்து
தலையாலேபலி தேருந்தலைவனைத்
தலையே நீ வணங்காய்

கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன் தன்னை
எண்டோள் வீசி நின்றாடும் பிராந்தன்னைக்
கண்காள் காண்மின்களோ

செவிகாள் கேண்மின்களோ - சிவ
னெம்மிறை செம்பவள
எரிபோல்மேனிப் பிரான்றிறமெப்போதுஞ்
செவிகாள் கேண்மின்களோ

மூக்கே நீ முகராய் -முது
காடுறை முக்கண்ணனை
வாக்கே நோக்கிய மங்கைமணாளனை
மூக்கே நீ முகராய்

வாயே வாழ்த்துகண்டாய் - மத
யானையுரி போர்த்துப்
பேய்வாழ்காட்டகத் தாடும் பிரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்

நெஞ்சே நீ நினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சாடுமலை மங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்
கைகாள் கூப்பித் தொழீர்-கடி
மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனை
கைகாள் கூப்பித் தொழீர்

ஆக்கையாற் பயனென் - அரன்
கோயில்வலம் வந்து
பூக்கையாலட்டிப் போற்றியென்னாதவிவ்
ஆக்கையாற் பயனென்

கால்களாற் பயனென் - கறைக்
கண்டனுறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக்
கால்களாற் பயனென்

உற்றாரா ருளரோ - வுயிர்
கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறைகூத்தனல்லானமக்
குற்றாரா ருளரோ

இறுமாந் திருப்பன்கொலோ - வீசன்
பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ் சென்றங்
கிறுமாந் திருப்பன்கொலே

தேடிக் கண்டு கொண்டேன் - திரு
மாலொடு நான்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன்

வெள்ளி, 7 மே, 2010

இன்னொரு துளி அமுதம்..

அபிராமி அந்தாதியில் இன்னொரு துளி அமுதம்....

நாயேனையும் இங்குஒரு பொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறுபெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத் தங்க்கச்சியே!

பொருள்: நாயைப் போல கேவலமான பிறவியை உடைய இவனையும் ஒரு பொருளாக நினைத்து, நினைவில்லாமலே எமை ஆண்டு கொண்டாய். ( நினைவிருந்தால் கண்டிப்பாக இந்தப் பாவிக்கு அருள் செய்திருக்க மாட்டாய்). உன்னை உள்ள வண்ணம் அறியும் சிறந்த அறிவை இந்த பேயனுக்கு தந்தாய். நான் என்ன பேறு செய்தேனோ... எம் தாயே, திருமாலின் தங்கையே! மலை மகளே!

- செ சூரிய குமார்