வியாழன், 28 ஜனவரி, 2010

சிவநாம மகிமை

இனிய உறவுகளே,இக்கலிகாலத்தில் உய்ய சிறந்த முறை 'பகவான் நாம சங்கீர்த்தணம்' என்று பல புராணங்கள் உரைக்கின்றன. இதோ! சிவநாமத்தின் பெருமையை விளக்கும் ஒரு நல்ல பாடல் உங்களுக்காக....இதன் பெயர் சிவ நாம மகிமை....படியுங்கள்.... பலன் பெறுங்கள்....

சிவநாம மகிமை (சிவப்பிரகாச சுவாமிகள்)

வேத மாகமம் வேறும் பலப்பல
வோதி நாளு முளந்தடு மாறன்மின்
சோதி காணிருள் போலத் தொலைந்திடுந்
தீதெ லாமுஞ் சிவசிவ வென்மினே. 1

புல்ல ராயினும் போதக ராயினுஞ்
சொல்லவ ராயிற் சுருதி விதித்திடு
நல்ல வாகு நவையென் றகற்றிய
செல்ல றீருஞ் சிவசிவ வென்மினே. 2

நாக்கி னானு நயனங்க ளானுமிவ்
வாக்கை யானு மருஞ்செவி யானுநம்
மூக்கி னானு முயங்கிய தீவினை
தீர்க்க லாகுஞ் சிவசிவ வென்மினே. 3

சாந்தி ராயண மாதி தவத்தினான்
வாய்ந்த மேனி வருத்த விறந்திடாப்
போந்த பாகத மேனும் பொருக்கெனத்
தீந்து போகுஞ் சிவசிவ வென்மினே. 4

வில்லி தென்ன விளங்குந் திருநுதல்
வல்லி பங்கன் மலரடி காணிய
கல்வி நல்குங் கருத்து மகிழவுறுஞ்
செல்வ நல்குஞ் சிவசிவ வென்மினே. 5

தீய நாளொடு கோளின் செயிர்தவு
நோய கன்றிடு நூறெனக் கூறிய
வாயுள் பல்கு மறம்வளர்ந் தோங்குறுந்
தீய தீருஞ் சிவசிவ வென்மினே. 6

வருந்தி யாற்றி வளர்த்த கதிர்த்தலை
பொருந்து வான்பயிர் போற்றுநர் போலவே
விரிந்த வேணியில் வெண்மதி சூடிபின்
றிரிந்து காப்பன் சிவசிவ வென்மினே. 7

முந்தை யோர்சொன் மொழிந்து சிவனென
நிந்தை தானச் சிவனை நிகழ்த்தினும்
வந்த தீவினை மாற்றுவ னாதலாற்
சிந்தை யோடு சிவசிவ வென்மினே. 8

நீச ரேனும்வா னீசர் நிகழ்த்தில்வா
னீச ரேனுஞ் சிவசிவ வென்கிலார்
நீச ரேயென் றியம்புறு நின்றுப
தேச நூல்கள் சிவசிவ வென்மினே. 9

எண்ணி நெஞ்சிற் சிவசிவ வென்பவர்
வண்ண மென்பதங் கிட்டி வணங்கவு
முண்ண டுங்குவ னொண்டிறற் கூற்றுவன்
றிண்ண மீது சிவசிவ வென்மினே. 10
      
ஜெ.சூரிய குமார் 
 

தெய்வீகத் திருவுலா...

இனிய உறவுகளுக்கு,
கடந்த வாரம் நான் செங்கல்பட்டில் உள்ள திருத்தலங்களை தரிசித்தேன்.
திருக்கழுக்குன்றம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதன் அருகில் உள்ள ருத்ர கோடீஸ்வரர் ஆலயம் பற்றி பலருக்கு தெரிந்திருக்காது.

ருத்ரகோடீஸ்வரர் ஆலயமானது திருக்கழுக்குன்றத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் மற்றும் பக்தவச்சலேஸ்வரர் ஆலயத்தைக் காட்டிலும் பழமையானது.
இங்கு கோடி ருத்திரர்கள் இறைவனை வழிபட்டு த்ங்கள் சாபம் நீங்கியதாக வரலாறு கூறுகிறது. மேலும் இங்கு நந்திகேஸ்வரர் கருட பகவானின் சிரத்தைக் கொய்தி ஆணவத்தை அடக்கியதாகவும் வரலாறு தொடர்கிறது. முத்லில் இத்தலத்தை தரித்த பின்னரே திருக்கழுக்குன்றம் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள்.
நடராஜர் மிகவும் அழகான தோற்றத்துடன் காட்சியளிப்பார். ருத்ர கோட்டீஸ்வரியோ சாந்த சொரூபியாக அருள் பாலிக்கிறாள்.

மிகவும் அமைதியான, ஊன் உருக்கி, உள்ளொளி எழுப்பி உவப்பிலா ஆனந்தம் அளிக்கும் தலம். ஒருமுறை தொழுதால் கோடி முறை தொழுத பலன் கிடைக்கும்.
நேரம் கிடைக்கும்போது சென்று வாருங்கள்.

திருவுலா தொடரும்

- சூரியன்

திங்கள், 4 ஜனவரி, 2010

திருமுறை

முன்னுரை:

நண்பர்களே, முதலில் மங்களகரமாக ஆரம்பிக்க விழைந்து 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' 8ஆம் திருமுறையிலிருந்து ஒரு பாடலைத் தருகிறேன். சரணாகதி என்பதின் தீர்க்கமான மற்றும் முழுமையான விளக்கத்தை எனக்கு உணர்த்திய பாடல் இது.
முந்தை வினை ஓய இதை உரைத்து சர்வ மங்களம் பெற்று சதாசிவன் அருள் பெற்று எந்நாளும் இன்புற்று இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நன்றி.

வேண்டத் தக்கது அறிவோய் நீ ! வேண்ட
முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன், மாற்கு அறியோய் நீ! வேண்டி
என்னைப் பணி கொண்டாய்:
வேண்டி, நீ யாது அருள் செய்தாய் ? யானும்
அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும்
உந்தன் விருப்பன்றே!


வெள்ளி, 1 ஜனவரி, 2010

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். விரைவில் சுவையான தகவல்களோடு உங்களை சந்திக்கிறேன்.