இனிய உறவுகளே,இக்கலிகாலத்தில் உய்ய சிறந்த முறை 'பகவான் நாம சங்கீர்த்தணம்' என்று பல புராணங்கள் உரைக்கின்றன. இதோ! சிவநாமத்தின் பெருமையை விளக்கும் ஒரு நல்ல பாடல் உங்களுக்காக....இதன் பெயர் சிவ நாம மகிமை....படியுங்கள்.... பலன் பெறுங்கள்....
சிவநாம மகிமை (சிவப்பிரகாச சுவாமிகள்)
வேத மாகமம் வேறும் பலப்பல
வோதி நாளு முளந்தடு மாறன்மின்
சோதி காணிருள் போலத் தொலைந்திடுந்
தீதெ லாமுஞ் சிவசிவ வென்மினே. 1
புல்ல ராயினும் போதக ராயினுஞ்
சொல்லவ ராயிற் சுருதி விதித்திடு
நல்ல வாகு நவையென் றகற்றிய
செல்ல றீருஞ் சிவசிவ வென்மினே. 2
நாக்கி னானு நயனங்க ளானுமிவ்
வாக்கை யானு மருஞ்செவி யானுநம்
மூக்கி னானு முயங்கிய தீவினை
தீர்க்க லாகுஞ் சிவசிவ வென்மினே. 3
சாந்தி ராயண மாதி தவத்தினான்
வாய்ந்த மேனி வருத்த விறந்திடாப்
போந்த பாகத மேனும் பொருக்கெனத்
தீந்து போகுஞ் சிவசிவ வென்மினே. 4
வில்லி தென்ன விளங்குந் திருநுதல்
வல்லி பங்கன் மலரடி காணிய
கல்வி நல்குங் கருத்து மகிழவுறுஞ்
செல்வ நல்குஞ் சிவசிவ வென்மினே. 5
தீய நாளொடு கோளின் செயிர்தவு
நோய கன்றிடு நூறெனக் கூறிய
வாயுள் பல்கு மறம்வளர்ந் தோங்குறுந்
தீய தீருஞ் சிவசிவ வென்மினே. 6
வருந்தி யாற்றி வளர்த்த கதிர்த்தலை
பொருந்து வான்பயிர் போற்றுநர் போலவே
விரிந்த வேணியில் வெண்மதி சூடிபின்
றிரிந்து காப்பன் சிவசிவ வென்மினே. 7
முந்தை யோர்சொன் மொழிந்து சிவனென
நிந்தை தானச் சிவனை நிகழ்த்தினும்
வந்த தீவினை மாற்றுவ னாதலாற்
சிந்தை யோடு சிவசிவ வென்மினே. 8
நீச ரேனும்வா னீசர் நிகழ்த்தில்வா
னீச ரேனுஞ் சிவசிவ வென்கிலார்
நீச ரேயென் றியம்புறு நின்றுப
தேச நூல்கள் சிவசிவ வென்மினே. 9
எண்ணி நெஞ்சிற் சிவசிவ வென்பவர்
வண்ண மென்பதங் கிட்டி வணங்கவு
முண்ண டுங்குவ னொண்டிறற் கூற்றுவன்
றிண்ண மீது சிவசிவ வென்மினே. 10
ஜெ.சூரிய குமார்