இறைவன் மிகப்பெரியவன்...பாகுபாடற்றவன் என்பதை மனித குலத்திற்கு உணர்த்த செய்த திருவிளையாடல்களில் ஒன்று திருப்பாணாழ்வார் வரலாறு.
இந்த மாலையின் ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு மணம் வீசும் வலைப்பூவிலிருந்து பறிக்கப்பட்டது...மாலையாக்கி அரங்கனுக்கு சூட்டியது மட்டுமே அடியேன் கைங்கர்யம்...
பயோ-டேட்டா
பெயர் : திருப்பாணாழ்வார்
காலம் -8ம் நூற்றாண்டு ( 750 - 780 கி.பி.)
மாதம் - கார்த்திகை
திருநட்சத்திரம் - கார்த்திகை
ஊர் - உறையூர்.
பன்னிரு ஆழ்வார்களில் பதினோராவது ஆழ்வார்...
வேறு பெயர்கள்
பாணர் ,முனிவாகனர் ,யோகி – வாஹனர் ,கவீஸ்வரர்
அம்சம் - ஸ்ரீவத்சம் (ஸ்ரீமன் நாராயணனின் மார்பில் இருக்கும் மச்சம்)
திருப்பாணாழ்வார் திருச்சி உறையூருக்கு அருகில் உள்ள திருக்கோழி என்னும் கிராமத்தில் வாழ்ந்த, பாணர் என்னும் தீண்டத்தகாத இனத்தைச் சேர்ந்த, ஒரு தம்பதியரால் வளர்க்கப்பட்டார். இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. பாணர் என்பவர்கள் பாண் என்னும் இசைக்கருவியினால் இறைவனையும், மன்னனையும்பற்றி இனிமையான பாடல்களைப் பாடி, கேட்போர் அனைவரையும் அகிலம் மறக்கச் செய்வர். அப்படிப்பட்ட ஒரு பாணர் எப்படி ஆழ்வார் ஆனார் என்பதே இக்கதை....
திவ்ய தேசங்களில் தலையாயதாக விளங்கும், திருவரங்கம் காவேரித் தாயின் கரையில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! திருப்பாணாழ்வார் வாழ்ந்த காலத்தில், காவிரியின் மறுகரைக்கு, அதாவது அரங்கன் அருள் பாலிக்கும் திருத்தலத்திற்கு, பாணர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வர அனுமதியில்லை. அதனால், தினமும் மறுகரையில் நின்று கொண்டே, மாலவனை மனதிற்குள்ளேயே நினைத்து மதுரமான பாடல்களை பாண் என்னும் இசைக்கருவியிலே பாடிப் பாடி பரவசம் கொள்வார்.
ஒருநாள் வழக்கம் போல் ஆழ்வார் தன்னை மறந்து அரங்கனை அந்தரங்கமாய் தரிசித்துக் கொண்டிருந்த வேளையில், திருவரங்கத்தின் அர்ச்சகர் இலோக சாரங்க முனி என்பவர், திருவரங்கப் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்வதற்காகக் காவிரியில் நீர் எடுக்க வந்தார். அப்பொழுது, திருப்பாணாழ்வார் கரையில் நின்று கொண்டிருந்தார். அவரைத் தீண்டாமல், சென்று நீர் கொணர வேண்டும் என்பதற்காக பல முறை, அந்த அர்ச்சகர் அவரை விலகச் சொல்லி கடிந்து கொண்டார்.
ஆனால், திருப்பாணாழ்வார் பக்தியில் மூழ்கியிருந்த படியால் அவர், அந்த அர்ச்சகர் அழைத்ததை அறியவில்லை. எனவே, கோபம் கொண்ட அர்ச்சகர், ஒரு கல்லை எடுத்து திருப்பாணாழ்வார் மேலெறிந்தார். பாணர் நெற்றியில் இரத்தம் வழிந்தது. பாணர் கண்களைத் திறந்து பார்த்தார். ‘ஐயோ, அரங்கனுக்குத் திருமஞ்சனம் கொண்டு செல்லும் இம்முனிவரின் கைங்கர்யத்துக்குத் தடங்கலாக இருந்து விட்டோமே’ என்று வருந்தி விலகிச் சென்றார்..
பிறகு திருமஞ்சன தீர்த்தம் எடுத்துக்கொண்டு, குடை, சாமரம், மேளதாளங்களோடு கோவில் சன்னதிக்குச் சென்றார் லோகசாரங்கர். அங்கே கண்ட காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது. திருவரங்கனின் திருநெற்றியில், அதாவது எந்த இடத்தில் திருப்பாணாழ்வாருக்கு அடிப்பட்டதோ அந்த இடத்தில் இறைவனுக்கு இரத்தம் கசிந்தது. பெருமாளின் திருமுக மண்டலத்தில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. லோகசாரங்கர் பெருமானின் நிலைகண்டு பதறினார். மிகுந்த மனப் பாரத்துடன் வீடு திரும்பினார். இரவு முழுதும், தான் ஏதோ பெரிய பாவம் செய்து விட்டதாய் பரிதவித்த அர்ச்சகரால் உறங்க முடியவில்லை. அன்று இரவே, திருவரங்கப் பெருமாள் அர்ச்சகரின் கனவில் தோன்றி, 'திருப்பாணாழ்வாரை உன் தோளில், அவர் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் எள்ளளவும் இல்லாமல் ஏற்றிக் கொண்டு வா! இதுவே நீ செய்த பாவத்திற்கு பரிகாரமாக அமையும்' என்று கூறினார்.
மறுநாள் காலையிலேயே, திருப்பாணாழ்வாரிடம் சென்று, நடந்தவற்றைக் கூறி அவரைத் தன் தோளில் ஏறிக் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொண்டார். ஆனால், திருப்பாணாழ்வாரோ, தான் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர். தங்கள் தோளில் நான் செல்வது சரியாகாது' என்று மிகவும் பிடிவாதமாக மறுத்தார். ஆனாலும் அர்ச்சகர் விடாபிடியாக அவரைத் தன் தோள் மேல் தூக்கி வைத்துக் கொண்டு, திருவரங்கக் கோயிலுக்குள் சென்றார். அக்காட்சியைப் பார்த்த ஊர்மக்கள் அனைவரும் அதிசயித்துப் போயினர்.
கோயில் கருவறைக்குள் நுழைந்ததும், தன் தோளில் இருந்து ஆழ்வாரை இறக்கிவிட்ட அர்ச்சகர், ஒரு ஓரமாக பணிவாக நின்று நடப்பதை எல்லாம் கவனித்தார். கோயிலில் முதல் முறையாக கால் வைத்த திருப்பாணாழ்வார், கருவறையில் அவர் முதன் முதலில் கண்டது, இறைவனின் திருப்பாதம் தான்.
அவர் படிப்படியாக இறைவனின் திருவடி முதல் திருமுடி வரை ஒவ்வொன்றாகக் கண் குளிரத் தரிசித்தார். அத்துடன் அவர் நின்று விட வில்லை. தன் கண்ணால் கண்டு, உயிருருக அனுபவித்த இன்பத்தை, பத்து பாசுரங்களில் இறைவனின் திருவடி, தூய ஆடை, உந்தி(தொப்புள்), திருமார்பு, கண்டம்(கழுத்து), பவளவாய், கமலக்கண்கள், திருமேனி உட்பட பெருமாளைப் பற்றிய ஒவ்வொரு அழகையும் அமலனாதிபிரான்... என்று துவக்கத்தில் வைத்துப் பாடி பரவசமடைந்தார்.
ஒவ்வொரு பாசுரத்திலும் பெருமானின் ஓர் அங்கத்தின் அழகை வருணிக்கிறார். இவர், இறைவனைக் கண்ட பொழுதிலேயே, தன் ஊண் உருக, உயிர் கசிய இறைவனின் பேரருளையும், புறத்தோற்ற அழகையும் கண்டு பாடிய பாடல்களே அமலனாதிபிரான் ஆகும். அமலனாதிபிரான், அமுதத்திரட்டில், முதலாயிரத்தின் ஆறாம் திரட்டாக உள்ளது.
திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரான் எனப்படும் பத்துப் பாடல்கள் இதோ...
1. திருவடி அழகு
அமலன், ஆதிபிரான், அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர்கோன், விரையார்பொழில் வேங்கடவன்
நிமலன், நின்மலன், நீதிவானவன், நீள்மதில் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே
பொருள் :
அவன் பரிசுத்தமானவன். உலகுக்கெல்லாம் மூலகாரணமானவன். உலகப் பற்றுக்களில் மயங்கிக் கிடக்கும் என்னைத் தன்னுடைய அடியார்களுக்கு ஆட்படுத்தியவன். நித்ய சூரிகளுக்குத் தலைவன். அவன் மணம்மிகுந்த சோலைகள் சூழ்ந்த திருமலையிலே (திருப்பதி) தங்கி நான் விரும்பாமலே, நான் கேட்கும் முன்பாகவே எனக்கு அருள் செய்தவன். உயர்ந்த மதில்களை உடைய திருவரங்கத்தில் கண்வளரும் அப்பெருமானின் திருவடித் தாமரைகள் தாமே வந்து என் கண்களுக்குள்ளே புகுந்தது போலிருந்தது.
அடியவர்களுக்கு ஆதாரமாயிருக்கும் திருவடிகளின் அழகு தம்மை ஆட்கொண்டதை முதல் பாசுரத்தில் பேசுகிறார்.
2. பீதக ஆடை அழகு
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற
நிவந்த நீள்முடியன், அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன், கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தையே
பொருள் :
எப்பொழுதும் ஆனந்தத்தோடு கூடிய மனத்தை உடையவன். அண்டங்களைக் கடந்துசெல்லும் உயர்ந்த திருமுடி உடையவன். தன்னை எதிர்த்துவந்த அசுரர்களையெல்லாம் கொடிய அம்புகளால் உயிர் வாங்கிய இராமபிரானாக விளங்குபவன். மணம்பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவரங்கத்தில் கண் வளர்ந்து அருள்பவன். அப்பெருமானின் திருவரையில் சார்த்திய பீதாம்பரத்தின் மேல் என்சிந்தை சென்றது. முதல் பாசுரத்தில் அவனுடைய திருவடித் தாமரைகள் தாமே வந்து என் கண்ணுள் புகுந்தன என்றார். தலைச்சன் கன்றை ஈன்ற பசு தன் கன்றுக்குட்டிக்குப் பழக்கம் இல்லாததால் முதலில் தானே வலியப்போய் தன் மடுவை கன்றின் வாயில் கொடுக்கும். பால் குடித்துப் பழகியபின் அக்கன்று தாய்ப்பாலின் ருசி அறிந்தபின், தாய்ப்பசு காலாலே உதைத்தாலும் ஓடிச்சென்று பால்குடிக்கும். எம்பெருமானின் திருவடி முதலில் தானே வலியவந்து ஆழ்வாருக்கு அருட்சுவையை ஊட்டியதை முதல் பாடலில் தெரிவிக்கிறார். இப்பாடலில் அருட்சுவைப் பாலின் ருசியறிந்த கன்றைப்போல தனது நெஞ்சு தானே தேடிச் சென்றதைத் தெரிவிக்கிறார்.
3. நாபிக்கமல (உந்தி) அழகு
மந்திபாய் வடவேங்கட மாமலை வானவர்கள்
சந்திசெய்ய நின்றான், அரங்கத்(து) அரவின் அணையான்
அந்திபோல் நிறத்தாடையும், அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்(து) இன்னுயிரே
பொருள் :
திருமலையில் பெண்குரங்குகள் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவியபடி இருக்கும். தேவர்கள் பூக்களைக் கொண்டு பெருமாளை
ஆராதனை செய்துகொண்டே யிருப்பார்கள். அப்படி ஆராதனை செய்ய வரும்போது திருமலையின் சிகரங்களில் கொஞ்சம் இளைப்பாறுவார்கள். அவ்வளவு உயர்ந்தமலை அது! அரங்கத்தில் திருவனந்தாழ்வான் மேல் பள்ளிகொண்ட பெருமானுடைய பட்டாடை செவ்வானம் போன்ற நிறமுடையது. பிரமனைப் படைத்த அழகிய நாபிக்கமலமும் செந்நிறப் பீதாம்பரம் இவற்றின்மேல் என் உயிர் படிந்துவிட்டது.
4. உதரபந்தம்
சதுரமாமதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்தும்
உதிரவோட்டி ஓர் வெங்கணை உய்த்தவன், ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட, மாமயிலாட, அரங்கத்தம்மான்
திருவயிற்று உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே
பொருள் :
நாலு பக்கங்களிலும் உயர்ந்திருக்கும் மதில்களல் சூழப்பட்ட இலங்கை மாநகரத்தின் அரசனான இராவணனை முதல்நாள் போரில் தோல்வியுறச்செய்து வெறுங்கையோடு இலங்கைக்கு அனுப்பிவைத்தான் இராமன். அதுமட்டுமல்லாமல் இன்றுபோய் போர்க்கு நாளை வா என்றும் சொன்னான். சீதையை விட்டுவிட மனமில்லாமல் மறுபடியும் போர்செய்ய வந்தவன் தலைகள் பத்தையும் உதிரும்படியாகக் கணைதொடுத்தவன் தலைகளை வெட்டி வீழ்த்த என்று சொல்லாமல் இலேசாக அதிக முயற்சி இல்லாமல் உதிரும்படியாகத் தலைகளை உதிர்த்தான், கணைவிட்டான் என்று நயமாகச் சொல்கிறார். வண்டுகள் இசை பாட, மயில்கள் ஆடும் திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் அரங்கநாதன் திருவயிற்றில் அணிந்திருக்கும் உதரபந்தம் என்னும் திருவாபரணம் என் நெஞ்சினுள் எப்போதும் நிலைத்திருக்கும்.
[உதரபந்தம் - அரைஞாண் கயிறு]
5. திருஆர மார்பழகு
பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்
கோரமாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்தம்மான் திரு
ஆரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே
பொருள் :
என்னுடைய மிகப்பாரமான, சுமக்க முடியாத பாபங்களை என்னிடமிருந்து தொலைத்தான் அதனால் நான் பாபங்களனைத்தும் நீங்கப் பெற்றவனானேன். என்னைத் தன்னிடம் அன்புடையவனாகப் பண்ணிவைத்தான். அதுமட்டுமா, அரங்கநாதன் என் மனத்தினுள்ளும் வந்து புகுந்து விட்டான். சாதாரணமாகக் கதவை திறந்து வா என்று அழைத்தபின் வருவதற்கும் வந்து புகுவதற்கும் வித்தியாசம் உண்டு. இடித்துத் தள்ளிக்கொண்டு புகுதல். ‘வந்து புகுந்து இருந்தாள் பழைய இருப்பிடமாக’ என்பார் அபிராமி பட்டர். இப்படி அரங்கநாதன் வந்து என்னுள்புக நான் என்ன தவம் செய்தேனோ!முற்பிறவியில் பெரிய தவத்தைச் செய்திருப்பேனோ?தெரியவில்லை. பிராட்டியும் முத்தாரமும் வீற்றிருக்கும் அந்தத் திருமார்பு என்னை ஆட்கொண்டது.
6. கண்டத்தழகு
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன், அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய அப்பன்
அண்ட பகிரண்டத்து ஒருமாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே
பொருள் :
வெண்மையான பிறைச்சந்திரனைச் சடையில் தரித்த சிவன், பிரும்ம கபாலத்தில் பிக்ஷை எடுத்துத் திரிந்த பாபத்தைப் போக்கிய பெருமான். வண்டுகள்
வாழும் சோலைகளால் சூழப்பட்ட திருவரங்கத்தில் பள்ளி கொண்டவன். அண்ட பகிரண்டங்களையும் பூமியையும் ஏழு குலமலைகளையும் அமுது செய்தருளிய
திருக்கழுத்து என்னை சம்சார சாகரத்தில் அகப்படாமல் உய்யக் கொண்டதே!
7. திருவாயழகு
கையினார் சுரிசங்கு அனல் ஆழியார் நீள்வரை போல்
மெய்யனார், துளப விரையார், கமழ்நீள்முடி எம்
ஐயனார், அணிஅரங்கனார், அரவினணைமிசை மேய மாயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
பொருள் :
சுழியை உடைய சங்கையும் அனல் கக்கும் சக்கரத்தையும் தனது திருக்கைகளில் தரித்தபடி இருக்கிறான் அரங்கன். அவன் மேனி நீண்ட மலை போல விளங்குகிறது. மணம் கமழும் துளப மாலைகள் அவனுடைய நீண்ட முடியை அலங்கரிக்கின்றன. என் ஐயன் திருவனந்தாழ்வான்மேல் சயனிப்பவன். அந்த மாயனின் சிவந்த திருவாய், ஐயோ! அதன் அழகை என்னென்று சொல்வேன்! அந்தச் சிவந்தவாய் என்னை, என் சிந்தையைக் கொள்ளை கொண்டுவிட்டதே! பெண்களின் கொவ்வைச் செவ்வாயில் ஈடுபட்டிருந்த என்னைத் தன்பக்கம் ஈர்த்துக் கொண்டதே!
8. கண்ணழகு
பரியனாகி வந்த அவுணன் உடல்கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிபிரான் அரங்கத்தமலன் முகத்து
கரியவாகிப், புடைபரந்து, மிளிர்ந்து, செவ்வரியோடி நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே
பொருள் :
மிகப் பெரிய வடிவோடு தன்னை எதிர்த்து வந்த இரணியனின் குடலைத் தன் நகங்களால் கிழித்த நரசிங்கன், பிரமன் முதலிய தேவர்களுக்கும் அணுகவும் அனுபவிக்கவும் அரியவனாக இருப்பவன். எல்லோருக்கும் முன்னால் முதலில் தோன்றி முதல் காரணமான ஆதிப்பரம்பொருள். அரங்கமாநகரில் கண்வளரும் அழகிய மணவாளன். அவனுடைய திருமுக மண்டலத்தில் கறுத்து, விசாலமாகப் பரந்து, ஒளிவீசும், செவ்வரியோடிய, காதளவோடிய கண்கள் என்னை அவனிடம் பித்தேறும்படி செய்துவிட்டன. கல்நெஞ்சனான என்னையும் அவன் கண்கள் தன் பக்கம் இழுத்துக்கொண்டு விட்டன.
9. நீலமேனி எழில்
ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலமேழும் உண்டான் அரங்கத்தரவின் அணையான்
கோலமா மணியாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்
நீலமேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே
பொருள் :
பிரளய காலத்தில் ஆலமரத்தின் சிறிய இலையிலே தன்னந்தனியே சின்னஞ்சிறு பாலகனாய் பள்ளிகொண்டான். ஏழு உலகங்களையும் தன் திருவயிற்றிலே அடக்கியவன். திருவரங்க நகரில் திருவனந்தாழ்வானை அணையாகக் கொண்டு பள்ளிகொண்டவன். அவனுடைய இரத்தின ஆரமும், முத்து மாலையும் எல்லாவற்றுக்கும் மேலாக எல்லைகாண முடியாத அந்த நீலமேனி அழகும், ஐயோ! அதை எப்படிச் சொல்வேன்! என் நெஞ்சு பூராவும் வியாபித்து விட்டதே.
10. மற்றொன்றைக் காணாத கண்கள்
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்டவாயன், என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன், அணியரங்கன், என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே
பொருள் :
நீலமேக வண்ணன், ஆயர்குலத்தில் பிறந்த வெண்ணையுண்ட வாயன், அவன் என் நெஞ்சைக் கொள்ளை கொண்டான். அண்டங்களுக்கெல்லாம் தலைவனான அவன் திருவரங்கத்தில் அழகாகக் கண்வளர்பவன். உண்ண உண்ணத் தெவிட்டாத அமுதம்போன்ற அவனைக் கண்டு சேவித்த கண்கள் வேறெதையும் சேவிக்குமா? ஆரா அமுதனான அவனுடைய அழகைக் கண்டு களித்த கண்கள் வேறு எதையும் கண்டு களிக்குமா? கண்டு களிக்கவும் பாணர் விரும்பவில்லை.
மற்ற ஆழ்வார்கள் தங்கள் ஊரையும் பெயரையும் (முத்திரை) பாசுரக் கணக்கையும் கூறியதுபோல இவர் தம் பெயரையோ ஊரையோ குறிப்பிட வில்லை. உற்றாரை யான் வேண்டேன் ஊர்வேண்டேன் பேர் வேண்டேன்’ என்ற மனோபாவம்! அவருடைய கண்ணும் கருத்தும் அரங்கனிடமே, அவன் அழகிலேயே ஈடுபட்டன. அவர் தன்னை மறந்தார். இத்தனை காலமாகக் கோயிலுக்குள்ளே வந்து தரிசிக்க முடியமல் இருந்ததால் இன்று அரங்கநாதனை மிக அருகிலிருந்து தரிசித்த ஆனந்தக் களிப்பில் தன்னையே இழந்தார். தன் நாமமும் கெட்டார், தலைப்பட்டார் தலைவன் தாள். ‘அரங்கநாதா, உன்னைக் கண்ணாரக் கண்டபின்,உன்னைக் கண்ட கண்கள் வேறு எதையும் பார்க்க விரும்புமா?’ என்று கேட்டவுடன் அரங்கன் திருப்பாணாழ்வாரைத் தன் மேனியோடு சேர்த்துக் கொண்டார். காந்தம் இரும்பை ஈர்ப்பதுபோல, காய்ந்த இரும்பில் விழுந்த நீர் போல ஆழ்வார் அரங்கனோடு ஐக்கியமானார். அமுதமே கிடைத்தபின் பால் எதற்கு? ....
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இவர் பாடியுள்ளவை பத்துப் பாசுரங்கள் மட்டுமே என்றாலும் அவை ஒவ்வொன்றுமே நல்மாணிக்கங்களக விளங்குகிறது.
தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைத்த ஒருவரின் பக்திக்கு மெச்சி, எம்பெருமான் அவருக்கு அளித்த சீரும் சிறப்பும் இவ்வுலகில் வேறு எவருக்கும் கிடைக்காத அரிய பாக்கியம். இதிலிருந்து நாம் அறிவது, இறைவனை முழுமனத்துடன் அறிந்தால், அரி அவன் எவருக்கும் அரியவன் அல்ல. எந்த சாதியாயினும், எம்மதமானாலும், எல்லா உயிருக்கும் எவ்வித வேறுபாடுமில்லாமல் அருள் புரிவான் அரங்கன்.
தன்னை முழுமனத்துடன் தருவதே இறைவனுக்கு சிறந்த காணிக்கை, அது யார் வேண்டுமானாலும் தரலாம், வரையறை இல்லாது... என்னை நினைத்து நெகிழ்தலே எனக்கான அபிஷேகம்....என்ற வாக்கிற்கிணங்க....அவனை நினைப்போம்....அரங்கனருள் பெறுவோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக